சென்னை : ஜூலை,08

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தும், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதை விட குறைவாகவும் உள்ளது, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நமக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றார்.

இதே போல மக்களின் ஒத்துழைப்பு 100% அனைத்து பகுதிகளிலும் இருக்க வேண்டும் என்ற அவர் தமிழகத்தில் மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கையில் மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைகளுடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கொரோனோவுடன் மற்ற நோய்களின் தாக்கமும் இருப்பவர்களை சிகிச்சை அளித்து காப்பாற்றுவது தான் சவாலாக உள்ளதாக கூறிய அவர் முன்கூட்டியே இவற்றை கண்டறிவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள கட்டுபாட்டு மையம் அமைத்தல், ஆலோசனை வழங்கல் என பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் சுகாதாரத்துறை வழிகாட்டுதல் படி திருவொற்றியூர் மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்பட்டு வருகிறதாக கூறிய அவர் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து, தொற்று எண்ணிக்கை குறையும் ஆறுதலான செய்தி தினந்தோறும் வர வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு செய்ய வருவது நமக்கு ஊக்கமளிக்கிறது, அவர்கள் கடந்த முறை இங்கு வந்த போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்திருந்தனர்.

மின் கட்டணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்
மின் கட்டண உயர்வு குறித்த புகார்களை மின் துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார்,
இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை அரசு விரைவில் விளக்கும் என்றார்.