திருவள்ளூர் :
“திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எனக்குச் சொந்த ஊர். நான் பொறக்கிறப்பவே அப்பா தவறிட்டாங்க. அக்காவையும், என்னையும் அம்மாதான் வளர்த்தெடுத்தாங்க (உருவாக்கினாங்க)வறுமையைச் சமாளிக்க அப்பள கம்பெனி, இட்லிக்கடை, ஹோட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும்தான் என்னோட வளர்ச்சிக்குக் காரணம்.

என் தாய்மாமன் ஹரிதாஸ் சிலம்பம் மாஸ்டர். சின்ன வயசிலேயே நானும், எனது அக்காவும் அவர்கிட்ட சிலம்பம் கத்துக்கிட்டோம். அவர்தான் எங்களை படிக்க வெச்சார். இப்போ நான் சென்னை தனியார் கல்லூரியில் பிஹெச்.டி ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்கிற சூர்யாவுக்கு சிலம்பம் மட்டுமல்ல; ஜிம்னாஸ்டிக், கராத்தே, யோகா, பறையாட்டம் எனப் பல கலைகள் தெரியும்.
சிலம்பத்தில் மாவட்ட அளவில் 35 போட்டிகளிலும், மாநில அளவில் 25 போட்டிகளிலும் வென்றிருக்கிறார். தேசிய அளவிலான 10 போட்டிகளில் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

`எனக்குத் தெரிஞ்ச கலையை மத்தவங்களுக்கும் கத்துகொடுக்க நினைச்சேன். அப்படித்தான் ஆரம்பமாச்சு ‘சுப்பிரமணிய ஆசான் சிலம்பக் கூடம்’. இப்போ 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி எடுக்கிறாங்க. வறுமையில சிக்கித் தவிக்கிற மாணவர்களிடம் கட்டணம் வாங்கறதில்லை” என்கிற சூர்யா, அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறார். இவரது சேவைக்காகவே டாக்டர் அனிதா விருது, சாவித்ரிபாய் புலே விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

நான் படிக்கிற ராணிமேரி கல்லூரியிலும், மாணவிகளுக்குச் சிலம்பம் கற்றுத் தருகிறேன். தனியார் பள்ளிகளில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த மாணவர்களிடம் நிறைய திறமை இருக்கு. இவங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறது எனக்கு அவ்வளவு உற்சாகமா இருக்கு” என்கிறவர், பெண் குழந்தைகள் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் சீண்டல்களில் இருந்து தப்பிக்கணும்னா பெண்கள் அவசியம் சிலம்பம் கத்துக்கணும். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நான் சிலம்பப் பயிற்சி அளிக்கப் போயிருக்கேன். அங்கெல்லாம் பெண்களும் சிலம்பத்தை மதித்து மகிழ்ச்சியா கத்துக்கறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது பெருமையா இருந்தாலும், தீராத மனக்குறையும் எனக்குள்ள இருக்கு. அரசாங்க வேலைவாய்ப்புப் பட்டியலில் சிலம்பத்துக்குத் தனி இடம் ஒதுக்கலைங்கிறதுதான் என் கவலைக்குக் காரணம். அரசாங்கம் இதைக் கவனத்தில் கொண்டால், தமிழகத்துல இருந்து பலபேர் தேசிய அளவில் கோப்பைகள் வெல்வது நிச்சயம்!” என்று உறுதியோடு சொல்கிறார் சூர்யா.
