மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் மகாவீர் அவர்கள் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு அறநெறியினையும் ஆன்மிக நெறியினையும் தவறாது பின்பற்றியவர். மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும்.

பகவான் மகாவீரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில் ஒவ்வொருவரும் மகாவீரின் வாழ்க்கையையும், போதனைகளையும் மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்த்தி ‘மகாவீர் ஜெயந்தி’ இன்னாளில் அனைத்து துன்பங்களும் மறைந்து இன்ப பெருகட்டும் என மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.