கோவை :தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கோவை வட்டார மையம் சார்பில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான மின்-சந்தைப்பகுதி (GeM Portal) குறித்த பயிற்சி நிகழ்வு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை கொடிசியா தலைவர் திருஞானம் அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் பேசுகையில் அரசாங்க மின்-சந்தைப்பகுதிக்கான பயிற்சிகள் மக்களின் உள்னுழைவு இடற்பாடுகளை மிகவும் குறைக்கும் எனவும், கொடிசியா வளாகத்தில் ஜெம்மிற்கான சேவை மையம் அமைக்கவும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கும் அரசாங்க மின்-சந்தைப்பகுதியில் இருக்கும் உள் நுழையும் வழிமுறைகள்,கொள்முதல் மற்றும் ஏலம் குறித்த உத்திகள் குறித்து ஜெம் ஆலோசகர் சபரிஸ் அவர்கள் விளக்கிக்கூறினார்.

மேலும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC ) ஆலோசகர் அரவிந்த் அவர்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் முனைவோருக்குகான டிஜிட்டல் வர்த்தக சேவை குறித்து விளக்கினார்.

புத்தொழில் குறித்த விழிப்புணர்வினையும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அந்நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி அவர்கள் விளக்கி கூறினார்.

இந்த பயிற்சியில் கோவை மாவட்டத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
