சென்னை:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 24ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னலம் பாராமல் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் , மருத்துவர்களும் தனது பங்களிப்பை இரவு பகல் பாராது ஆற்றி வருவதை தமிழ்நாடு முஸ்லீம் சார்பில் மனதார பாராட்டி மருத்துவ பணியாளர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில் , மேலும் ஒரு அவலமாக இஸ்லாமியர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு வரும் சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக உள்ளது. தங்களது உயிரைக் காப்பாற்றுங்கள் என மருத்துவர்களை நம்பி வாழும் மக்களுக்கு தங்களது சிகிச்சை மூலம் நலம்பெற செய்யும் மருத்துவர்கள் அர்பணிப்பு சேவையை மருத்துவ சமுதாயத்திற்கிடையே, இது போன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாக உள்ளது. சாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவரையும் சமமாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவ துறையில் ஒரு கரும்புள்ளியாக இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க சில தனியார் மருத்துவமனைகளும், அதில் பணிபுரியும் மருத்துவர்களும் மறுத்திருக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மகப்பேறு மருத்துவம் செய்ய தனியார் மருத்துவமனை ஒன்று மறுத்துள்ளது. அதேபோல இஸ்லாமியர் முதியவர் ஒருவருக்கு இருதய சிகிச்சைஅளிக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் .

மேலும் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இப்படி புறக்கணிப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் அதில் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்
