வாணியம்பாடி : ஏப்ரல்,26
உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகம் பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் திரு.சிவனருள் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர் விஜயகுமார் அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை 100 சதவீத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மூன்று நகரங்களை தனிமைப்படுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை வெளியில் எவரும் அவசியமின்றி வரவேண்டாம் என அறிவுறுத்தினர்.இந்த ஊரடங்கு காலத்தில் காவல் துறையினரின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பத்திரிகையாளர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது அதன் முடிவு 23ஆம் தேதி வந்ததில் கிராமிய காவல் ஆய்வாளருக்கு வைரஸ் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது அதைத்தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, தலைமை காவலர் மற்றும் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் காவல் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பனூர் பகுதியில் அவரது வீட்டிற்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த சாலை முடக்கப்பட்டது தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வைரஸ் தொற்று உள்ள காவல் ஆய்வாளர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலை ஏன் வந்தது என்று பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் காவல்துறையினர் வெறும் மாத சம்பளத்திற்கு பணியாற்றும் நபர்கள் அல்ல அவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோமானால் அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்கா துயரம் நிறைந்தது.
ஒருபுறம் மேலதிகாரிகளின் கடுமையான சொற்கள், மறுபுறம் ஆட்சியாளர்களின் அள்ளக் கைகள் எல்லாம் காவல் நிலையத்தில் அதிகாரம் செய்வது மேலும் இவர்களின் குடும்ப வாழ்க்கையும், மன உளைச்சல் உடன் தான் சொல்கிறது.
இத்தனையும் தாண்டி இவர்கள் பணிபுரிவது அரசாங்க ஊதியத்திற்காக அல்ல இவர்கள் வளரும்போதே நாட்டுப் பற்றுடனும், மக்களை காக்கும் பொதுநல எண்ணத்துடனும் வளர்ந்ததால் காவல்துறையில் சேர்ந்து பணிபுரிகின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்களாகிய நாம் தயவுசெய்து இந்த ஊரடங்கு உத்தரவு முடியும்வரை, நாட்டில் சகஜமான நிலை ஏற்படும்வரை சமூக விலகலை கடைப்பிடித்து காவல் துறையினரின் பணியை நம்மால் முடிந்தவரை சுலபமாக்க வேண்டும்.
தயவுகூர்ந்து எண்ணிப் பாருங்கள் நம் வீட்டில் வீட்டின் தலைவருக்கோ அல்லது மனைவிக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு அடைந்தோமானால் நம் குழந்தைகள் நிலை என்ன என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள் பாதிக்கப்பட்ட கிராமிய காவல் ஆய்வாளர் ஒரு பெண்மணி அவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு அரசுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
செய்தியாளர்
(கே.எஸ் விஜயசஞ்சை
வாணியம்பாடி)
