பெரம்பூர் : ஆக, 10

சென்னை பெருநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு அறிவுரைகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரு.வி.க நகர் மண்டலத்தில் தினசரி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோய் தொற்று 7% ஆக கண்டறியப்படுவதாகவும் அதனை 6% ஆக குறைக்கும் முயற்சியில் முன்களப் பணியாளர்களும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் இந்த வருடம் 56% கூடுதல் மழைப்பொழிவு கிடைத்துள்ளதாகவும், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக தெரிவித்த அவர், பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்து தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் பாதுகாப்பானது எனக் கூறப்பட்டபோதும் எதிர்பாராதவிதமாக நிலச்சரிவில் பல தமிழர்கள் உயிரிழந்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்களது உடல் மிகவும் சிதைந்து இருப்பதால் அங்கேயே உடல்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் தவறாமல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், தி.மு.க வின் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளை தடுக்கவே இ-பாஸ் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாகக் கூறிய உதயநிதியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க இ-பாஸ் அவசியம் என்பதாலேயே அது நடைமுறையில் உள்ளது எனவும் இ-பாஸ் பெறுவதை எளிமைப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தி.மு.க எந்த பணியையும் செய்யவில்லை எனவும் இந்த விஷயத்தில் தி.மு.க வின் நிலைபாடு வெறும் பூஜ்ஜியம்தான் என குற்றம் சாட்டிய அவர், தி.மு.க என்னென்ன கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.