சென்னை :தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த கோடை நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நலச்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து, அதில் பானைகளை வைத்து தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். சில கட்சிகளும், பணம் படைத்த அமைப்புகளும் குடிக்க நீர் மோரும் கூட கொடுப்பார்கள்.
‘தமிழகத்தில் இன்று அதிக வெப்பநிலையில் உள்ள மாவட்டங்களான மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்பநிலை உயர்வின் காரணமாக அடுத்த வரும் 3 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நீட்டித்துள்ள நிலையில், அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை செய்து மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தண்ணீர்பந்தல் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி தண்ணீர் பந்தல் அமைக்கும் போது அதனை விழாவாகவே, மக்களை ஒன்றாக கூட்டி தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிகளை நடத்தாமல், பந்தல் அமைத்து அங்கு பானை அல்லது கேன் மூலம் தண்ணீர் வைத்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்ய வேண்டும் . அதே போன்று பொதுமக்கள் தண்ணீர் குடிக்க சில்வர், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக ஒரு முறை உபயோகப்படுத்தும் பேப்பர் கப்களை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆகவே தண்ணீர் பந்தல் அமைக்க அரசு அனுமதிக்க வேண்டுமென மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்.