சென்னை:
மத ரீதியான ஆன்மீகப் புனிதப் பயணம் செல்பவர்களுடன் ,
மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் எனக் கூறுவதையும் , District Residency Program என்ற திட்டத்தையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை (NEET PG) ஒரே நாளில் ஒரே முறையில் ஒரே கட்டத்தில் நடத்திட வேண்டும் .
ஒன்றிய பாஜக அரசு மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்துத்துவா கருத்தியலை திணிப்பதையும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதையும் கைவிட வேண்டும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் , அரசு மருத்துவமனைகளையும் அதன் சேவைகளையும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறை வேற்றிட
வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்.
மேலும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் அவர்கள் பேசியதாவது:
முது நிலை மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பு காலத்தின் பொழுது 3 மாதங்கள் மாவட்ட சுகாதார இயக்கத்தின் கீழ் கட்டாயமாக பணியாற்ற (District Residential Programme) வேண்டும் என்ற திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பையும் , மாநில உரிமையையும் பறித்து வருகிறது . முதுநிலை மருத்துவப் படிப்புக் காலத்தில் தங்களுடைய துறை சார்ந்த பயிற்சியை முறையாக மேற்கொள்வதற்கு
இத்திட்டம் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இடையூறாக
உள்ளது. இது மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சித் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.
எனவே ,இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் இந்து மத புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சேவை செய்தால் ,
அது இத்திட்டத்தின் கீழ் சேவை செய்ததாக சான்றிதழ் வழங்கப்படும் .
அதாவது, யமுனோத்திரி,
கங்கோத்திரி, கேதர்நாத், பத்திரிநாத் போன்ற நான்கு இடங்களுக்கு (Char Dham Yatra ) ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு மருத்துவ சேவை மேற்கொண்டால் இந்த டி.ஆர்.பி ( District Residential Programme) சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.இது கடும் கண்டனத்திற்குரியது.
ஒன்றிய அரசு என்.எம்.சி சட்டம் 2019 யை இயற்றி
நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு,டிஆர்பி போன்றவைகள் மூலமாக மாநில அரசின் உரிமைகளை பறிப்பதோடு மட்டுமின்றி, இந்துத்துவா கருத்தியலை மருத்துவக் கல்வியில் திணிக்க திட்டமிடுகிறது என்ற எங்களது நீண்ட கால குற்றச்சாட்டு உறுதியாகி வருகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்துத்துவா அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக மாறியுள்ளது.
சரகர் உறுதி மொழி திணிப்பு, தடுப்பூசி திட்டத்திற்கு “இந்திர தனுஷ் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்தது , ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெயரை “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்” என மாற்றம் செய்தது போன்றவை சில எடுத்துக்காட்டு
கள் ஆகும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஆன்மீகப் பயணத்திற்கு மட்டும் இவ்வாறு முதுநிலை மருத்துவ மாணவர்களின் சேவையை கட்டாயப் படுத்துவது என்பது நமது நாட்டின் மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் , அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
ஆனால் இப்பணியில் மதவாத நோக்கோடு தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுவது சரியல்ல.
முதுநிலை மருத்துவ மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்துவது சரியல்ல. இது இளம் மருத்துவர்களை மதரீதியாக பிளவு படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு உதவிட இலவச மருத்துவ முகாம்களை அரசே உருவாக்கிட வேண்டும். இப்பணிக்கென மருத்துவர்களை தனியாக நியமிக்க வேண்டும்.
எனவே, முது நிலை மருத்துவ மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டி.ஆர்.பி திட்டத்தையே முழுமையாக ரத்து செய்திட வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒரே நாளில் ஒரே முறையில் ஒரே கட்டத்தில் நடத்திட வேண்டும் . பல கட்டங்களில்,பல அமர்வுகளில் நடத்துவது முறைகேடுகளுக்கே வழி வகுக்கும்.
ஒன்றிய பாஜக அரசு மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்துத்துவா கருத்தியலை திணிப்பதையும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதையும் கைவிட வேண்டும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் , அரசு மருத்துவமனைகளை, அதன் சேவைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான அரசாணை எண் 354 ல் உரிய திருத்தங்களை செய்து ஊதிய உயர்வு மற்றும் கால முறை பதவி உயர்வு (Time Bound Promotion) வழங்க வேண்டும்.
பயிற்சி மருத்துவர்கள் ,முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்படாமல்,மீதியுள்ள ஆர்.சி.எச் தூய்மை பணியார்களையும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக (MPHW – Multi Purpose Hospital Worker) பணி நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்அவர்கள் உறுதி அளித்தபடி, 60 வயது நிரம்பிய 210 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக
தேர்வு பெறாத 736 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களையும், அவர்களது நீண்ட கால பணியை கருத்தில் கொண்டு , பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் களாக பணிநியமனம் செய்திட வேண்டும்.
15 ஆண்டு முதல் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக பணிபுரியும் , அரசு ஆரம்ப சுகாதார நிலைய” நம்பிக்கை மையம் ” ஆய்வக நுட்பனர் ஆற்றுநர் (PHC ICTC) பணிகளில், பணிபுரிபவர்களின் ஊதியம் நான்காண்டு காலமாக உயர்த்தப் படவில்லை. அவர்களுடைய ஊதியத்தை உடனடியாக உயர்த்த வேண்டும். இப்பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அவர்களின் ஊதியத்தை குறைக்கக் கூடாது. இப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
தமிழக இரத்தப் பரிசோதனை நிலையங்களில் , 80 விழுக்காடு சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களாகும். இவை வெறும் ரத்தப் பரிசோதனைகளை மட்டுமே செய்கின்றன. இந்நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை – எளிய மக்கள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளை, மிக குறைந்த கட்டணத்தில் , எளிதாக தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே செய்து கொள்கின்றனர்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில்
சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில்
28.11.2024 அன்று GO (MS)No : 390 வெளியிடப் பட்டுள்ளது. தனியாக , சொந்தமாக சிறிய இரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள டெக்னீசியன்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்
துறை ஏற்படுத்தி யுள்ளது. இதில் பல NABL தரச்சான்று பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாணை எண் 390 படி நகர்புறத்தில் உள்ள இரத்தப் பரிசோதனை நிலையங்கள் ( Clinical Laboratories),ஜெனிடிக் பரிசோதனை நிலையங்கள்( Genetic Laboratories), நோய்குறியியல் பரிசோதனை நிலையங்கள் ( Pathological Laboratories) மற்ற பிறவற்றிற்கும், 500 முதல் 700 சதுர அடி பரப்பளவும்,
கிராமப்புறத்தில் உள்ள இத்தகைய பரிசோதனை நிலையங்களுக்கு 300 சதுர அடி பரப்பளவும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்த ஆணை பெரிய மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானதாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டுவதாகவும் உள்ளது. எனவே இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சி.டி, எம்.ஆர்.ஐ, அல்டிரா சவுண்டு,எக்ஸ்ரே போன்ற பல்வேறு வேறு வகையான பரிசோதனைகளை செய்யாமல் , இரத்தப் பரிசோதனைகளை மட்டும் செய்யும் நிலையங்களை தனியாக வகைப்படுத்தி நகர் புறத்திற்கு குறைந்த பட்ச இடவசதி 150 சதுர அடி எனவும் ,கிராமப்புற லேப்களுக்கு 100 சதுர அடி எனவும் நிர்ணயிக்க வேண்டும்.
இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒன்றிய அரசு போல், அடிப்படை ( Basic) நடுத்தர ( Medium) மற்றும் முன்னேறிய
( Advanced ) என வகைப்படுத்த வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் யோகா பயிற்றுநர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. அவர்களுக்கு கடந்த 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது .அந்த வழங்கப்படாத ஊதியத்தை, உடனடியாக வழங்க வேண்டும்.
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
கடந்த 15.04.2025 அன்று சட்ட மன்றத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பரமணியன் அவர்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தது வரவேற்பிற்குரியது.
தமிழகத்தில் 1,57,900 பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களில் 50 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.
கணிசமானோர் ART சிகிச்சையையும், மருந்துகளையும் அரசு மருத்துவமனைகளில் பெற்று வருகிறார்கள். எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிர் வாழ்வதற்கு MDR, XDR காசநோய் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை (ART) மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அந்தக் கூட்டு (ART) மருந்துகளுடன் சேர்ந்து கூடுதல் ஊட்டச்சத்து ,கால்சியம், புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எனவே எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கூடுதல் “ஊட்டச்சத்துக்கான ஆதரவு நிதி”யாக ரூ 2,500-த்தை சமூக பொருளாதார பாரபச்சமின்றி வழங்க வேண்டும்.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, “இளைப்பாறு மையம்,”( Drop In centre) துவங்கப்பட்டதற்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அதில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகின்ற ரூ 8000 மாத தொகுப்பூதியத்தை ரூ 18,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும்
பெண்களுக்கு என்று தனியாக இளைப்பாறு மையங்களை துவங்க வேண்டும்.
கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு (DBC Workers) குறைந்தபட்ச தினக் கூலி சட்டத்தின்படி அரசாணை 2D எண் 62 தொழிலாளர்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள் 11.10.2017 ன் நடைமுறையில் உள்ளது. DBC பணியாளர்களை ‘தகுதித் திறன் பெறாத தொழிலாளி ’’ (Unskilled) என தவறான முறையில் வகைப்படுத்தி மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதை கைவிட்டு, 2017 அரசு ஆணையிலேயே கூறிய படி ‘பகுதித் திறன் வாய்ந்த தொழிலாளி’’ செமி ஸ்கில்டு கிரேடு 1 ( Semi Skilled Grade I ) என வரையறுத்து, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து மாநகராட்சிகளில் ரூ21,780, நகராட்சிகளில் ரூ19,780, பேரூராட்சிகளில் ரூ17,780 ஊராட்சிகளில் ரூ15,780ம் ஊதியமாக வழங்கிட வேண்டும்.
DBC பணியாளர்களை உயர் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள். கவுன்சிலர்கள் போன்றோரின் போன்றோரின் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், சமையல் வேலைகளில் ஈடுபடுத்தப் படுத்தக் கூடாது.
DBC பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது.அவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணியிடத்தில் பாதுகாப்பும், பணி நிரந்தமும் வழங்கிட வேண்டும். தினக்கூலி முறையை கைவிட்டு மாத ஊதியமும், ஊதியத்துடன் வாரவிடுமுறையும், சம வேலைக்கு சம ஊதியமும் வழங்கிட வேண்டும்.
DBC பணியாளர்களுக்கு சுய உதவி குழுவின் மூலமாகவோ ,
ஒப்பந்ததாரர் மூலமாகவோ பணியை வழங்கக் கூடாது.
கொசு ஒழிப்புப் பணியாளர்களை அவர்களின் பணிக்கு பொருத்தமான மருத்துவதுறையின் கீழ் மட்டுமே பணியமர்த்தி மருத்துவத் துறையின் மூலமாகவே ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையில், தினக்கூலி, ஒப்பந்த,தற்காலிக பணி நியமனங்களை கைவிடவேண்டும். தற்போது பணியில் உள்ள, தினக்கூலி, தற்காலிக செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆயுஷ் மருத்துவர்கள் ,பல் மருத்துவர்கள் , நடமாடும் மருத்துவமனை ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
தற்காலிக மருத்துவப் பணியாளர்களுக்கு ESI,PF வழங்கிட வேண்டும்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் உள்ளிட்ட அனைத்து வலைதளங்களிலும், பல ஆண்டுகளாக அனைத்து செய்திகளும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.கிராமப்புற ஏழை – எளிய மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் தமிழில் அனைத்து தகவல்களும் தரப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலத்தையும் பயன்படுத்திட வேண்டும்.
மேலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,
பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்
எஸ். தனவந்தன் , தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வே.காசிநாத துரை , பாசிட்டிவ் விமன் நெட் வொர்க் அகில இந்தியத் தலைவர் பி.கௌசல்யா மற்றும் நிர்வாகிகள் எஸ்.சத்தியா,எஸ்.சரஸ்வதி,
தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்
டி.ஆர். தேன்மொழி
ஆகியோர் உடன் இருந்தனர்.