சென்னை :ஜூன்,26
கொரோனா பரவல் தடுப்பையொட்டி பொது ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் கொரோனா பரவல் தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு ட்பட்ட எருக்கஞ்சேரி (35 வது வட்டம்) அண்ணா சாலை, கிருஷ்ணமூர்த்தி சாலையில் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் 35 வது வட்டம் கொடுங்கையூர் ஆர்.வி.நகரிலுள்ள குரு வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பு மருத்துவ முகாமில் நடைபெற்ற பரிசோதனைகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வீடு, வீடாக சென்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களிடம் நேரில் கலந்துரையாடப்பட்டது.
கலைந்துரையாடலுக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18 வது நாளாக கொரோனா பரவல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஆயிரம் களப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் 757 பேரும்,நேற்று 89 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1986 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவும் விகதம் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 0.98 சதவிகிதமாக உள்ளது. சென்னையில் மேலும் 3 மண்டலங்களிலும் கொரோனா பரவும் விகிதம் 1 சதவிகதத்திற்கும் குறைவாக உள்ளது.
கிருமி நாசினி தெளிக்கும் பணியில் இரண்டு மடங்கு ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
2200 ஊழியர்கள் அனைவரும் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை அமல்படுத்துவதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு காவல் துறையில் அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை, டெல்லியை ஒப்பிடும்போது சென்னையில் பரவல் குறைவாகவே உள்ளது. மக்களுக்கும் தேவையான விழிப்புணர்வு கிடைத்துள்ளது. கொரோனாவை தமிழக அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை தற்போது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை அனைத்து கட்டமைப்புகளும் இங்கு சிறப்பாக இருப்பதால் மக்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்.
கிண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க தமிழக முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.
கடந்த 18 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் தற்போது 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியும், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டும் தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

முதல்வரின் விசாலமான நடவடிக்கையால் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தெளிந்த சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஸ்டாலினின் அவதூறு தகவல்களை வைத்து குழுப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழகம் முழுமையான கட்டுக்குள் வரும்.
தண்டையார்பேட்டை மண்டலங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்கு பணியாளர்கள் தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவதூறை தொடர்ந்து ஸ்டாலின் பரப்புவதால் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் எழுந்துள்ளது.
தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் கொரோனா பணியாளர்களுடன் பணியாற்ற உத்தரவிடுங்கள். அவர்கள் வந்து பணியாற்றுவதால் எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
பரிசோதனை அதிகரிப்பதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதே வேளையில் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
நம்பிக்கை விதையை மட்டுமே மக்களிடையே விதைக்குமாறு ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
இதில் அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி மல்லிகா ஐபிஎஸ், புளிந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா உள்பட பலர் இருந்தனர்.
