சென்னை :கடந்த சில நாட்கள் முன்பு வரை கொரோனா வைரஸ் என்கிற பெயரில் தினமும் 5 முறை மீடியாக்களில் லைவ், 5 முறை டிவிட் மூலமான தகவல் என பரபரப்பாக இருந்த தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டப்பட்டு விட்டது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது.
காரணம் கொரோனா தொடர்பாக கவர்னரை சந்திக்க சென்ற முதல்வர் பழனிச்சாமி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மட்டுமே உடன் அழைத்து சென்றார்.
அதுவரை அரசல் புரசலாக தெரிந்து வந்த ஹெல்த் மினிஸ்டர் விவகாரம் வெளிப்படையாகவே தெரிந்து விட்டது என்கின்றனர் கோட்டை வட்டாரம். அதேபோல் கடந்த ஒரு ஆண்டுகாலமாக விஜயபாஸ்கர் பேட்டி அளிக்கும் போது அருகில் மட்டுமே நின்று கொண்டிருந்த சுகாதாரத்துறை செயலாளர் பீீலா ராஜேஷ் கடந்த 3 நாட்களாக புள்ளி விபரங்களை மீடியாக்களுக்கு கூற ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சமயத்தில் முதல்வருக்கு ஹெல்த் மீது அப்படி என்ன தான் கோபம்? என கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்.. முதல்வர் எடப்பாடியுடன் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் இருவரும் நெருக்கமாக இருப்பதை ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் என சீனியர்கள் யாரும் விரும்பவில்லை. அந்தவகையில் விஜயபாஸ்கரின் நடவடிக்கைகளை எப்போதும் யாரும் ரசித்ததில்லை. இந்த நிலையில் தான் கொரோனா தொடர்பான செய்திகளில் விஜயபாஸ்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புதுக்கோட்டை ஐடி விங்க் போட்ட மீம்ஸ்களை உளவுத்துறை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று கொண்டே இருந்தது. இந்த சமயத்தில் தான் அரசு உடனடியாக 530 டாக்டர்கள் மற்றும் 1000 நர்சுகள் பணி நியமனத்தில் நடந்த சில தகவல்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இப்படியாக கொரோனா வைத்து விஜயபாஸ்கர் அரசியல் செய்கிறார், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார் என்பதற்கான ஆதாரங்களை உளவுத்துறை அள்ளிக்கொட்ட சரி இனியும் சரிப்படாது என்கிற முடிவு எடப்பாடி வந்து விட்டார் என்கின்றனர் அவர்கள். இதன் காரணமாகவே கொரோனா தொடர்பான தகவல்களை எனக்குனாலும் சரி, மீடியாக்குனாலும் சரி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்கின்றனர் கோட்டை ஆட்கள்.. முக்கியமான நேரத்தில் தான் ஓரங்கட்டப்பட்டது ஹெல்த்க்கு அப்செட்டை கொடுத்திருக்கிறது.. இந்த நிலையில் தனிப்பட்ட விவகாரமாக முதல்வரை சந்திக்க அப்பாயிண்மெண்ட் கேட்டிருக்கிறார் ஹெல்த் என்கிற தகவலும் கோட்டை தரப்பில் கூறப்படுகிறது.. முதல்வரின் அப்பாயிண்மெண்ட் கிடைக்குமா?