சென்னை :144 மக்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது.கொரோனா வைரசை கட்டுபடுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்,பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 21 நாட்களுக்கு (ஏப்ரல் -14) நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இது வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியபட்டுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் வருமானம் இன்றி நாட்களை கடப்பதற்கு மிகுந்த இன்னலை அனுபவித்து வருகின்றனர். தற்போது மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால் மின் தேவை என்பது அதிகரித்துள்ளது.
இதனால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு வரும் நாட்களில் மின் கட்டணம் பெரும் சுமையை ஏற்படுத்தும். தற்போது தமிழக அரசின் சார்பில் 100 யூனிட் மின்சாரம் அனைவருக்கும் இலவசமாக வழங்கபட்டு வரும் போதிலும், 500 யூனிட்டுக்கும் மேல் இரண்டு மடங்கு மின் கட்டணம் உயரும் என்பதால். மக்களை இந்த மின் கட்டண சுமையிலிருந்து காக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்காமல், இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார்.