நுங்கம்பாக்கம் : .மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் கூட்டமைப்பின் சென்னை மண்டலம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி பவன் வளாகத்தில் மத்திய சேவை மற்றும் சரக்கு வரி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகள் :

ரயில்வே உற்பத்தி பிரிவுகள் 41 கனரக வாகன உற்பத்தி ஆலைகள் ராணுவ பணிமனைகளை தனியார் மயமாக்குவதையும் நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத பணியிடங்களை அவுட்சோர்ஸ் விடுவதையும் திரும்பப் பெறவேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1/1/2020, 1/7/2020 & 1/1/2021 ஆகிய மூன்று தவணை அகவிலைப்படி இடர்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

7வது ஊதிய குழு தொடர்பாக அமைச்சர்கள் குழு அளித்த உறுதிமொழியை அதாவது குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்டவற்றை அமல்படுத்த வேண்டும்.

ஊழியர்கள் தரப்பில் அமைக்கப்பட்ட என்.சி. மற்றும் ஜே.சி.எம் அமைத்த குழு சுட்டிக்காட்டிய 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்.சில குறிப்பிட்ட படிகளை மீண்டும் வழங்க வேண்டும். முன்பணம் மற்றும் பதவி உயர்வின் போது வழங்கப்படும் 2 ஊதிய உயர்வுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்.

என்.பி.எஸ் முறையை திரும்பப் பெற்று சி.சி.எஸ் (ஓய்வூதியம்) விதிகள் 1973ல் குறிப்பிட்டுள்ளபடி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

தவறாக பயன்படுத்தப்படும் 56 (ஜெ) விதியை திரும்பப்பெற வேண்டும்.

என்.சி ஜே.சி.எம் நிலைக்குழு கூட்டம் மற்றும் 47வது என்.சி ஜே.சி.எம் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

கோவிட் 19 தொற்று காலம் மற்றும் ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததாலும் வீட்டிலேயே தனிமைப் படுத்தியதலும் பணிக்கு வரமுடியாத ஊழியர்களின் பணி வரண்முறை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கோவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மருத்துவ ரீதியாக பணி செய்ய முடியாத நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 100 விழுக்காடு கருணை அடிப்படையில் அவர்களது வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.

ஊழியர்கள் முன் வைத்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்.

ஏற்கனவே ஓய்வு பெற்ற மற்றும் 31.டிசம்பர் 30.ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

எம்.ஏ.சி.பி திட்டத்தை 1/1/2006 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும்.

இரவு நேரத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு எந்தவித அடிப்படை சம்பள உச்சவரம்பும் இல்லாமல் இரவு நேர படி வழங்க வேண்டும்.

சி.ஜி.எச்.எஸ் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கோவிட் 19 தொற்றின்போது சிகிச்சைக்கு வசூலித்த கட்டணத்தை ஊழியர்களுக்கு மீண்டும் திருப்பி தர வேண்டும் என்று 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது