சென்னை:
பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா அகர்வால் அவர்கள் துவக்கி வைத்து சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து பிரகாசம் சாலை சந்திப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி வீதி நாடகம் மற்றும் மதுவுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

இந்த முகாமின் சிறப்பு அம்சங்களாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மல்லிகேஸ்வரர் திருக்கோயில் குளம், நந்தவனம் மற்றும் வளாகத்தை தூய்மை படுத்தினர்.

புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாடி தோட்டத்தை தூய்மை படுத்தி சர்வதேச காடுகள் தினமான 21-03-2022 அன்று பசுமை பூமி அமைப்புடன் இணைந்து 25 மரக்கன்றுகளை நட்டனர், முத்தியால்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை நடுநிலை பள்ளி மாணவர்களிடையே சுத்தம் சுகாதாரம், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், சிறுவர் வன்கொடுமை பற்றி விளக்க படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தின சுவர் சித்திரங்கள் வரைந்தனர்.

எஸ்.பி.பி.எஸ்(SBBS )திட்டத்தின் கீழ் 0 முதல் 6 வயது வரையுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையுடன் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு முகாமின் தினசரி நிகழ்வுகளாக மதியம் ஆளுமை திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள், மாலை சிலம்பம் , கராத்தே தற்காப்பு பயிற்சி மற்றும் நாடக கலை பயிற்சி நடைபெற்றது.

மேலும் இந்த முகாமின் நிறைவு விழா 24-03-2022 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் டி.கிளாடிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பா.ஆனந்தன், சென்னை மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட நாடல் அதிகாரி மற்றும் திரு. லாரன்ஸ், நிர்வாக பொறியாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கலை நிகழ்ச்சி மற்றும் சிலம்பம், கராத்தே பயிற்சியின் காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ச.லாவண்யா.,
சு.சுஜாதா, பு.சுஜாதா, இரா.இந்துமதி,
செபஸ்தி சகாய மாலதி தலைமையில் நடை பெற்றது.